Pages

facebook twitter

.

    • முகப்பு
    • அறிமுகம்
    • சினிமா
    • இலக்கியம்
    • பயணம்
    • செவ்வகம்




    கே. பாலச்சந்தரின் 'வறுமையின் நிறம் சிவப்பு' (1980) படத்தில்தான் பூர்ணம் விஸ்வநாதனை நான் முதலில் பார்த்தது. நேர்மை தரித்த மனவியல்பைப் பெற்றிருக்கும் ரங்கன் (கமல்ஹாசன்) கதாபாத்திரத்தின் வாழ்வு மதிப்பீடுகளை ஏற்கவியலாது முரண்படும் தந்தையாக நடித்திருந்தார். சங்கீத வித்வானான அவரது தம்பூராவை ரங்கன் திருடி விற்றுவிட்டு ஏதுமறியாததுபோல இருக்கும் காட்சியன்று வரும். தம்பூராவைக் காணாமல் பதறிப்போய் ரங்கனிடம் சண்டையிடும்போது, அவரது நடிப்பு அந்தக் கணங்களின் திரைப்பரப்பை கமலுக்கு இணையாய் நிரப்பிக் கொண்டதாய் எனக்கு நினைவு. இம்மாதிரி ஒரு சில காட்சிகளிலேயே தோன்றினபோதும், வலுவான நடிப்புத் திறனின் காரணமாக படம் பார்த்த பார்வையாளரது நினைவில் தம்மை முழுமையாக பதிப்பித்துக் கொண்ட நடிகர்களுள் பூர்ணம் விஸ்வநாதனும் இடம்பெறுவார். பின்பு அதே பாலச்சந்தரின் இயக்கத்தில் வெளியான 'உன்னால் முடியும் தம்பி' யில் வரும் உதயமூர்த்தியினது (கமல்ஹாசன்) தந்தைக் கதாபாத்திரம் (ஜெமினி கணேசன்) ஏறக்குறைய 'வறுமையின் நிறம் சிவப்பு' படத்தில் பூர்ணம் விஸ்வநாதன் செய்த பாத்திரத்தை கொஞ்சம் காத்திரமாகப் பிரதிபலிப்பதாக அமைந்தது.

    தொன்னூறுகளின் ஆரம்பம் என்று நினைக்கிறேன். தொலைக்காட்சி கொடுங்கனவாக வலுப்பெறாத காலம். அச்சமயம், சுஜாதாவின் எழுத்து மற்றும் பூர்ணம் விஸ்வநாதனின் நடிப்பு எனும் கூட்டிணைவில் சிறுபடங்கள் தொலைக்காட்சியில் இடம்பெற்றன. மாலைக்கும் இரவிற்குமான நடுநேரங்களில் அப்படங்களைக் காண்பதற்கென்றே வீட்டைவிட்டு எங்கும் செல்லாமல் காத்திருந்த நாட்களது. அந்த சிறுபடங்களில் சில எதிர்பாராத திடீர் திருப்பங்களுடன் பாதியில் முடிக்கப்பட்டு மீதி அடுத்த வாரம் எனச் சொல்லி ரசிப்பின் பொறுமையை சோதித்துவிடும். அதன்மீதியை உடனடியாகக் காணாமல் மனதில் நிம்மதி தோன்றாது எனும்படியிருக்கும் எனது பதற்றம். அன்றைக்கு இருந்த ரசனையின் பழக்கவுறவு தேர்ச்சியற்ற மனோநிலையின் ஊடானது என இப்போது தோன்றினாலும், அந்தக் காத்திருப்பின் புத்துணர்வு என்பது இன்றைக்கும் அழுத்தமான மகிழ்ச்சிகணங்களுடனேயே நினைவில் தடப்பட்டிருக்கிறது என்பது மறுக்கவியலாதது.

    பூர்ணம் தான் நடித்த படங்களில் ஒரேவிதமான கதாபாத்திர குணாம்சத்தையே வெளியிட்டார். தமிழில் கௌரவ கதாபாத்திரங்களில் நடித்த நடிகர்களில் தொன்னூறு சதவீதம் பேர் இம்மாதிரியான நடிப்பு முறையைக் கையாண்டவர்கள்தான். பொதுவாக, ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஈடுசெய்ய நாயகப் பாத்திரங்களுக்குத்தான் குணாம்சங்களில் வித்தியாசங்கள் தேவைப்படும். உப நடிகருக்கு அது பிரச்சினையாக இருப்பதில்லை. தனது ஒரேவிதமான நடிப்புச் சாயலையே அனைத்துப் படங்களிலும் பின்பற்றினபோதும் பார்வையாளருக்கு அலுப்பூட்டாத வண்ணம் திரையில் கோலோச்சினவர்களாக குறிக்கத் தக்கவர்கள் ரெங்காராவ், டி.எஸ். பாலையா, சி.கே. சரஸ்வதி போன்ற அரிய நடிகர்கள். இந்த வரிசையில் பூர்ணம் விஸ்வநாதனும் தன்னை இருத்திக் கொள்பவர் என்றே தோன்றுகிறது.



    அப்பாவித்தனமான ஒரு நபர் எதிர்பாராத சிக்கலில் அகப்படும்போது மேற்கொள்ளும் சமாளிப்பாக, வார்த்தைகள் வராமல் வெற்று ஓசைகளை எழுப்பி பிதற்றுவதைப் போல அவர் செய்யும் பாவனை தமிழ் ரசிகர் மத்தியில் மிகவும் பிரசித்தம். தொலைக்காட்சியிலும், மேடையிலும் மிமிக்ரி செய்யும் கலைஞர்கள்கூட அந்தப் பிதற்றலை சத்தமிட்டுத்தான் பூர்ணத்தை நமக்கு ஞாபகப்படுத்துவார்கள். எனது பார்வையில், தனது வழக்கமான குணவியல்பை பிரதிசெய்யாமல் முற்றிலுமாக மாறுபட்டு அவர் நடித்த திரைப்படம் 'மூன்றாம் பிறை' (1982) மாத்திரமே. அதில் இறுக்கமான குணம்கொண்ட கதாபாத்திரத்தில் சில்க் ஸ்மிதாவின் கணவராக சில காட்சிகளே வந்து செல்வார். சில்க் ஸ்மிதாவுடன் உறவு கொள்வதுபோன்ற ஒரு காட்சியிலும் நடித்து, (வெவ்வேறு வயதினருள் நிகழும் ஒவ்வாத உடலுறவின் மனநெருடலை அக்காட்சியில் இயக்குநர் பாலுமகேந்திரா திறம்படக் காட்டியிருப்பார்) பள்ளிப்பருவத்திலிருந்த எங்களைப் போன்ற விடலைகளினது 'வெறுப்பை' சம்பாதித்துக் கொண்டார் என்பது நினைவிருக்கிறது.


    பூர்ணம் விஸ்வநாதனை அனைவரது நினைவிலும் பதியச் செய்த படங்களாக எனக்குத் தோன்றுவது 'வருஷம் 16' மற்றும் 'மகாநதி'. 'வருஷம் 16' (1989) படத்தின் மூலமாக, பார்வையாளர்களிடம் பெரும் ஆர்வத்தைத் தூண்டியிருந்த குஷ்பூவிற்காக படம் பார்க்கப் போய், கார்த்திக்கையும் பூர்ணம் விஸ்வநாதனையும் மனதில் ஏற்றிக் கொண்டு வந்த அனுபவமே என்னுடையது. இந்தப் படத்தில் பூர்ணம் கதாபாத்திரமாக வாழ்ந்திருந்தார் என்றே சொல்வேன். குறிப்பாக 'வருஷம் 16' படத்தைத் தவிர்த்து, தாத்தாவிற்கும் பேரனுக்குமான உறவணுக்கத்தைப் பற்றிய படங்கள் தமிழில் குறைவு அல்லது இல்லவே இல்லை.


    அப்படத்தில் வரும் வி.கே. ராமசாமி, ஜனகராஜ் ஆகியோரது வலுவான கதாபாத்திரங்களின் சுவாரசியங்களையும் தாண்டி பூர்ணம் விஸ்வநாதனது கதாபாத்திரத்தின் வீச்சு படம் முழுக்கவே அழுத்தமாக வெளிப்பட்டிருக்கும். பேரன் கண்ணனோடு (கார்த்திக்) ஏற்பட்ட மனமுரணில் அவர் சாப்பிடாமல் சாய்வுநாற்காலியில் அமர்ந்திருக்கும் காட்சி, இதை எழுதும்வேளையில் எனது மனக்கண்ணில் பிம்பமாகிறது. பூர்ணத்தின் நடிப்பைத் திரையில் நிலைக்கச் செய்யும் காட்சியும் இதுதான். இப்படத்தைப் பார்த்த நாட்களில், ஒவ்வொரு குடும்பத்திலும் மென்மையுள்ளமும், அக்கறைகுணமும் கொண்ட தாத்தாக்கள் இருப்பார்களெனில் அவர்கள் பூர்ணம் விஸ்வநாதனது தோற்றத்தை ஒத்திருப்பார்கள் என்று நான் கற்பனையில் எண்ணிக் கொண்டதுண்டு.



    'மகாநதி' (1993) படத்தில் கிருஷ்ணசாமிக்கு (கமல்ஹாசன்) அடுத்து முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரம் பூர்ணத்தினுடையது. ஏறக்குறைய படத்தின் பெரும்பான்மை காட்சிகளில் வந்து செல்கிறார். சிறைச்சாலைக்குள் கிருஷ்ணசாமியும் அவரும் நிகழ்த்தும் மதம் குறித்த எதிரெதிர் வினைகள் சுவாரசியமானவை. சூழப்பெற்ற மனித வஞ்சிப்பால் தளர்வுற்று, தான் வணங்கும் கடவுளர்மீது உள்மனதில் சிறு சந்தேகம் தோன்றும்நிலையிலும், மத நம்பிக்கையை கைவிடாது இறுகப் பிடித்துக் கொள்ளும் சராசரி நபராக அவர் வெளிப்படுத்தியிருந்த நுட்பமான நடிப்பாற்றல் அவருக்குள் இருந்த சிறந்த கலைஞரை வெளிச்சமிட்டது எனலாம்.


    அதேபோல், கல்கத்தாவிலுள்ள சோனாகஞ்ச் பாலியல் தொழிலாளர்களது குடியிருப்புக்களில் மகளைத் தேடிச் செல்லும் கிருஷ்ணசாமியுடன் பூர்ணம் விஸ்வநாதனும் செல்வார். அப்போது அவர் பேசும் ஒவ்வொரு வசனமும் அந்தக் காட்சிகளின் துயரத்தை மேலும் அனுபவப்படுத்தும்விதமாக அமைந்திருக்கும். தமிழ்சினிமா வரலாற்றில் பூர்ணம் விஸ்வநாதனின் மறக்கவியலாத நடிப்புப் பங்களிப்பு என்னவென்று யாரேனும் கேட்டால், நான் தயங்காமல் சுட்டிக்காட்டுவது 'மகாநதி' திரைப்படமாகவே இருக்கும். அந்த அளவிற்கு அவரது தேர்ந்த நடிப்பாற்றல் அப்படத்தில் பதிந்துள்ளது.


    அவரை நான் நேரில் பார்த்தது ஒருமுறைதான். அது ஏதேச்சையான நிகழ்வு. 1993. சூட்சுமமான பிரம்மாண்டத்தில் அச்சமுறச் செய்வதும், ஜனப் பிதுக்கத்தில் தனி இருப்பின் அடையாளத்தை உதிர்ந்துபோகச் செய்வதுமான நகரமாகத் தென்பட்ட சென்னைக்கு நான் இடம்பெயர்கிறேன். நடிகர்களை நேரில் பார்த்திராத பருவம். கலைவாணர் அரங்கத்தில் ஏதோ திரைப்படம் சார்ந்து விருது வழங்கும் விழா ஒன்று நடக்கிறது என்றறிந்து செல்ல, அரங்கத்தின் வெளிமுற்றம் தள்ளுமுள்ளு கூட்டத்தால் நிரம்பி வழிந்துகொண்டிருந்தது. 'நடிகர்களைக் காண கிராமத்தைப் போல பெருநகரம் தவம் கிடக்காது' எனக் கற்பனை செய்திருந்த எனக்கு, அந்த தள்ளுமுள்ளு அதிர்ச்சியைத் தந்தது. கூட்டத்தின் கொந்தளிப்பு கருதி, ஆறுதல் பரிசாக சுவற்றில் கட்டப்பட்ட வெண்திரையில் உள்ளே நடக்கும் விழா நிகழ்வினைக் காட்டத் தொடங்கினார்கள். கூட்டம் சற்று நிதானப்பட்டு அப்படியே நின்றபடியும் அமர்ந்தபடியும் மேடையேறும் நடிகர்களைக் கண்டு விழிவியந்துகொண்டிருந்தது. எனது ஊரில் தொலைக்காட்சியில் விழா பார்த்த அனுபவம்தான் அங்கும் எனக்கு ஏற்பட்டதெனினும், 'நிஜத்திற்கு மிகவும் அருகிலிருக்கிறேன்' என்கிற எண்ணம் மாத்திரம் கூடுதல் சலனம்.


    விழா முடிந்தபின் வெளியேறும் வாகனங்களின் பின்னே பதறியோடி 'அவர் போகிறார், இவர் போகிறார்' எனக் கூட்டம் சூழ்ந்து கொள்ள, 'யாரையும் நேரில் பார்ப்பது இயலாத காரியம் போல' என எண்ணிக் கொண்டு அரங்கத்தின் வெளிவாசலை நோக்கி நடந்தேன். ஆர்வக் கசிவிலிருந்த மக்கள் திரளை கடந்தபோது பக்கவாட்டில் திடீரென ஒரு வெளிச்சம் போன்ற உணர்வு. திரும்பிப் பார்க்க, பூர்ணம் விஸ்வநாதன் அவரது துணைவியாருடன் தன்னுடைய வாகனத்தில் ஏறப்போகும் கணங்களுடன் நின்றிருந்தார். அவரை எவரொருவரும் கண்டுகொள்ளவில்லை என்பது எனக்கு சிறிய அளவில் ஆச்சரியத்தைத் தந்தது.


    திரைப்படத்தில் நான் கண்டதைவிட மென்மைப்பட்ட தோற்றத்திலும், மகிழ்ச்சிக்குப் பின்னாக சாந்தமுற்ற பாவனையிலும் இருந்தார். எனக்கு 'வறுமையின் நிறம் சிவப்பு' வித்வானாக அவர் செய்த நடிப்புக் காட்சிகள் சில கணங்களுக்கு சிறு பூச்சிகளாக ஞாபகத்தில் அலைந்து மின்னி மறைந்தன. எனக்கு அவரிடம் பேசவேண்டும் என்கிற எந்த நிர்பந்தமும் இல்லாமல் அவர் காரில் ஏறிச் செல்லும்வரை அங்கேயே நின்றிருந்தேன். பின்பு, ஒரு மோசமான தேநீரை உற்சாகமாக அருந்திவிட்டு பேருந்தில் ஏறி வீடு திரும்பின வழியில், என்னையுமறியாமல் அவர் 'வறுமையின் நிறம் சிவப்பு' படத்தில் வித்வானாக வாயசைத்த 'நல்லதோர் வீணை செய்தே' பாடலை அடங்கின சத்தத்தில் பாடினபடியே தூரம் கடந்தேன். என் மனதில் அவரது பிம்பம் நட்புடன் ஒட்டிக் கொண்டு உடன் வந்த பயணம் அது.


    சமீபத்தில், வெளிநாட்டுத் தொலைக்காட்சியின் தனிப்படத் தொடர் (Tele Films) ஒன்றிற்காக சிறுகதைகள் வேண்டும் என எனது நண்பர் கேட்டுக் கொண்டபோது, நான் உடனடியாக எழுதித் தந்த முதல் கதை 'ஊஞ்சல்'. தன்னியல்பாக எழுதப்பட்ட அக்கதையின் மையப்பாத்திரத்தின் நடமாட்டம், பூர்ணம் விஸ்வநாதனது மனபிம்பத்தின் அசைவுகளை ஒத்திருக்கிறது என்பதை கதையை எழுதும் கணங்களிலேயே கவனித்துவிட்டேன். நண்பரிடம், 'இந்தக் கதை படமாக எடுக்கப்பட்டால், மையக் கதாபாத்திரத்திற்கு பூர்ணம் விஸ்வநாதன்தான் பொருத்தமானவர்' எனக் கூற, அவரும் உணர்ந்து ஆமோதித்தார். பூர்ணம் இப்போது நடிப்பதில்லை என்றாலும் அவரிடம் கதையின் தீவிரத்தன்மையை உணர்த்துவதன் வாயிலாக ஒப்புதல் பெற்றுவிடலாம் என எண்ணியிருந்தேன். கதை படமாவதற்கான தீர்மானிக்கப்படாத காலத்திற்குரிய அவகாசமின்றி பூர்ணத்தின் வாழ்வு நிறைவுபெற்றுவிட்டது. அவருக்கு அந்தக் கதை அவரது தொடர்ந்த நடிப்பில் மறந்துவிடக்கூடிய ஒரு சிறு பங்கேற்பாகத்தான் இருந்திருக்கும். ஆனால் அந்தப் பங்கேற்பு இன்றைக்கும் எனது கற்பனையிலிருக்கும் அப்படைப்பின் முழுமைக்கு உகந்த ஆன்மாவைத் தருவதாய் அமைந்திருக்கும்.


    *
    Continue Reading


    புதுஎழுத்து - 14ஆம் இதழில் வெளியான எனது கவிதைகள்.


    1நினைவுப் பாதை

    *

    2எதைச் செய்தாலும் அறிந்தாலும் உணர்ந்தாலும்

    எல்லாவற்றிற்கும் இடைவிட்டு

    இடை தொடர்ந்து வருமொரு

    சூன்யம்தான் நம்மைக் காக்கிறது



    எனவே அர்த்த பூடகம் உடையாமல்

    பிம்பங்கள் சூழும் உதாரணம் கலை

    இல்லையெனில்

    மீண்டும் சாலைகடந்த பூனையின் நசுங்கின அலறல்

    உனது எழுத்தின் செவியில் கேட்கும் என்றாய்

    உன்னுள் பாவிக்கிடந்த இம்முறை



    உனது பார்வையில் உள்பொங்கின மறை சிரிப்பை

    கேட்டபோது குறுக்கிட்டது

    பூனையின் மருட்சியில் பிறந்தலையும் சூன்யமுகம்



    அடர்மழையென வீறுகிறது

    உனது சொல் துவக்கின நினைவின் மின்னல் வலி



    நாம் அமர்ந்த அறையில்

    முற்பிம்பங்களின் நெரிசலை பத்திரப்படுத்தி

    கடிகாரம் நிற்கிறது



    மரங்கள் உடல்சாயும் ஓசையின் நிலச்சரிவு



    அயர்வடைந்த மின்விசிறியின் மனஉளைச்சல் இன்னும்

    உன் கண்ணில் அடர்கிறது

    சொல்லை புணர்ச்சி செய்து நீ வாழத் துடித்த உயிர்த் தினவு



    காமம் இழந்தவனின் கவிதை மேலிருக்கும்

    கத்தியின் கூர்மை என



    உனது வாக்கியங்களின் உள்சயனம்

    3சொல்லில் சிக்காது சிந்தனையில் வாராது

    இருப்பற்றுப் போனதை உணர்ந்த அச்சத்தின் ஊன ஒலி



    சடலம் நிரம்பும் உடலின் மனப்பிதற்றல்

    வானம் எட்டுவதாயிற்று



    வழிநெடுக நிழல்தீண்டும் தனிமையின் கொலை துரத்தல்

    அக்கண உண்மை

    கிளை சாய்ந்த மரம் முகரும் பறவையின் கடும்துயர்



    வெகுண்ட சீற்றத்தில்

    பற்றுகிறது பாம்பின் நாக்கு தீயின் கொடும் திளைப்பில்

    பசியெறும்பு தின்ற சரீரம்

    வசிப்பின் மெய்மையை கடந்து

    மறைந்துபோனது தொலைதூரம்



    அடிபட்டும் சாகாத பறவையாய் உணர்வின் சித்தநீட்சி

    மாத்திரம்



    கலை தின்றுதீர்த்த வாழ்வு இருள்வெளியில் பெரும்பான்மை

    கழிந்ததும் பின் அழிந்ததும்

    உனக்கும்

    உன்னைத் தொட்ட எனக்கும் நிகழ்ந்த மாயம்



    பெரும்நரை பூத்து தோற்றகணம்தான்

    ஞானக் குகையின் வழிதிறந்து பேரதிர்வில்

    சிரித்தான் உன்னுள்

    நீ புக நினைத்த சித்தன் எனும் புத்தன்



    நானுமறிவேன் விலங்குகள் நிறைந்த

    அந்த மலைப்பாதையை



    பாலில் வழியும் முலையென கண்விழிக்கிறது

    அவனும் நீயும் இருந்தது குறித்த நம்பகம்



    கால்தவறி தரைவிழுந்து

    இகம் கரம்கோர்க்கும் உறவின் விருந்தில்

    சூடேற்றப்படும் நேசத்தின் சதை

    பழைய உணவாக பரிமாறப்படுகிறது



    வரவை உணர்த்தும்

    மழைதருணத்தின் கதவுகளாக அறைபடுகிறது

    அங்கு

    தொடர்ந்திருப்பது குறித்து நாம் கொண்ட கற்பிதம்



    உனது பிரதி வாசிக்கப்படுகிற தருணத்தில்

    மண் புதைந்த பாழ் சிற்பத்தின் கற்துளையில்

    எறும்புகள் தியானிக்க துவங்குகின்றன

    நெடும்நேரம்



    நசிவின் போதம் திரள நினைத்துப் பார்க்கையில்

    குற்றம் கனக்க நிகழ்ந்திருக்கிறது

    ஆதிமீனை உட்கொண்ட காமமுயற்சி



    பல்லியின் திட்டமிடலுக்கு பிணமாகும் பூச்சியின் பிரதிபலிப்பு

    உன்னை எழுத்தில் நீ இழந்ததுபோலவே

    சாயை தருகிறது இப்பொழுது



    சுற்றத்துடன் கொண்டிருந்த அன்பை துறவு செய்து

    பற்றின கிளை அறுபடும் தருணத்தில் புத்தன் (ஆக) நீ  யோசிக்கிறாய்



    மீனின் விறைத்த பார்வை



    இத்தனை அனுபவங்களும் தறிகெட்டலையும்

    அப்பாலின் மூலம்

    யாரும் விளங்கிக்கொள்ள முடியாத

    வாழ்வுப் புனைவை அணிந்து

    நீ உன்னைக் கண்ணாடியில் பார்த்துக் கூறிக்கொண்டது:

    4உனக்கு நீ இருப்பதால் நான் உண்டு: எனக்கு நீ இல்லை

    என்றால் நான் இல்லை



    உனது நடைதொடர்ந்து

    நீரின் சூலுற்ற பெருக்கத்தில் உறையக் காத்திருக்கிறது

    அசைவின் அனைத்தும்



    தனிமைப்பட்ட கதியில் உனது சூரல் நாற்காலியை

    சுற்றி வருகிறது

    நீ நேசித்து உயிர் தப்பின பூனை

    உடலசைத்து எஞ்சியிருந்த அலைவுக் காலம்

    *
    (தன்னையுணரத் தலைப்பட்ட நகுலன் நினைவில்)



    1. நகுலனது நாவலொன்றின் தலைப்பு



    2, 3, 4. அவரது ‘அஞ்சலி’ எனும் நீண்ட கவிதையின் வரிகள்

    *



    1நிழலற்றவனின் அலறல்

    *
    நூற்றாண்டைத் தொட்டுவிடும் ஒரு மரத்தின் வேரடியில்

    அமர்ந்து வாசிக்கிறேன் உனது கவிதைகளை



    இடைவெளியற்று பிணைந்திருந்த வெயிலின்

    மன சூன்யத்தை மேலும்

    வெம்மைப்படுத்திக் கொண்டிருந்தன

    கடக்கும் வாகனங்களின் சமன்குலைந்த பேரோசை



    காற்று நீங்கின வெற்றிடத்தின் மூச்சுத் திணறல்

    அசையாதிருந்தது சூழ்மை



    வியர்த்தது மேலும்



    வாசிப்பின் நதியோட்டத்தில்

    எண்ணெயில் பொறித்த மனித உடலமாக மிதந்து சென்றது

    உனது எழுத்தின் துயரம்



    நோய்கண்டவனின் நடையென புரளும் பக்கங்கள்

    மரத்தின் மறைந்த நினைவுகளாய் அடர்ந்திருந்த காகிதத்தில்

    தேள்கடி பட்ட தடங்களென கரும்வரிகள்



    எட்டிப்பார்த்து கால்நழுவி தேடிச் சென்றதில்

    விழியில் பட்டது வறுமையும் கூக்குரலும்



    வழிநிலைத்த அரவமானேன் நெடும்பொழுது



    நொடிப் பிளவின் அதிர்வில்

    எழுத்துக்களின் சிறையுடைத்து வெளிவீழ்கிறேன்



    வரிகள் புதையுண்ட மயானத்தில்

    மதுக்குப்பியின் இறுதிச் சொட்டை அருந்திவிட்டு

    காத்திருக்கிறாய் நீ

    அனுபவங்களின் சீழ் கசிவை எழுத முயலும் பதற்றத்துடன்

    எனது வரவை எதிர் கணித்து



    நமது சந்திப்பில் பாயக் காத்திருந்தது

    தறிகெட்ட போதையிலான விபத்தின் இரத்த நெடி



    பொழுதின் மனப்பிறழ்வில் தனிமையின் சிரமறுக்க

    உனது மடியில் முளைத்துவிட்ட மரமொன்றைத் தாலாட்டி

    பாடலொன்றை துவங்குகிறாய்

    காற்றின் காதுகள் கிழிபடும்படி



    2சிரஞ்சீவியின் சாபத்தால்

    வயோதிகம் கண்ட மழலையின் ஓலத்தைச் சுமந்தலைகிறது

    அப்பாடல்



    உச்ச இசை கதியில்

    பசித்த கனவின் வேதனையில் நொடிகள் கரைய

    மட்கிப் போனது உனது மடியிலிருந்த மரம்



    தனிமைப்பட்டு மீண்டும் அகம் வெறிக்கிறாய்



    துளி தவறாமல்

    படைப்பவனின் கண்ணீரைச் சேகரித்து

    நிரம்பிவழிகிறது உனது உற்றதுணையான மதுக்குப்பி



    எனது வருகைக்குப்பின் நாம்

    கிளையடித்து மூட்டிக்கொண்ட தீயில்

    வேதனையற்ற சிரிப்பொன்றை நீ உதிர்த்தாக

    என்னுள் கூறிக் கொள்கிறாய்

    3நானிந்த மண்ணில் இருப்பதும் இல்லாததும் ஒன்றுதான்



    வறுமையின் பிரளயம் தகிக்கும்

    நிலைப்பை தாங்கவொண்ணாது

    நீ உடைத்த மதுக்குப்பியிலிருந்து தெறித்த துளிகள்

    ரத்தம் பூசின வண்ணத்துப் பூச்சிகளாகப் பறக்கின்றன

    வெளியெங்கும்

    நிலா கொப்பளித்த சற்றுநேரம்



    நினைவின்போதம் கண்மறைக்க

    உண்மையின் அம்மணத்தை மறைந்துபார்த்த பதற்றத்தோடு

    அமர்ந்திருக்கிறோம் அவரவர் வெளியில்



    நமது மௌனத்தில் உறைந்திருந்தது

    உடலை உண்ணுமுன் உயிரை மயங்கச்செய்யும் பாம்பின்

    வலு அணைப்பு



    எதிர்பாராமல் பாத்திரம் உருண்டோடும் சிரிப்பை தவறவிட்டு

    4ரணம் நிறைய கவிதையும்

    கவிதை நிறைய கால்தடங்களுமாக விடைபெறுகிறாய் நீ



    உனது வாழ்வை

    புகைப்படமென ஞாபகம் காக்கிறது

    நீ பதிந்த இடத்தில்

    5காற்றின் கூர்மையான கத்தி விழுந்து

    வேரோடு சாய்ந்த மரம்’



    மேலும்

    நீ கணங்களுடன் கொண்டிருந்த தொடர்பை

    நினைவாய் ஓவியப்படுத்துகிறது

    காகங்கள் இரையென எண்ணி முகர்ந்துசென்ற

    உடைந்த குப்பியின் உதிர்ந்த சில்லொன்று

    *
    (மலையாளக் கவிஞர் ஏ. அய்யப்பன் நினைவில்)



    1. ‘புது எழுத்து’ வெளியீடான ‘அய்யப்பன் கவிதைகள்’ தொகுப்பில் ‘பாவம் மகாகனியின் இதயம்’ கவிதையிலிருந்து எடுத்தாளப்பட்டு கவிஞர் சுகுமாரன் இட்டிருக்கும் முன்னுரையின் தலைப்பு



    2. அவரது ‘புறத்தோல்’ கவிதையின் வரிகள்



    3. அய்யப்பனது ‘ருத்ரா என்ற காதலிக்கு’ கவிதையின் வரியிலிருந்து உருவானது



    4. அவரது ‘ஞானஸ்நானம்’ கவிதையின் வரிகள்



    5. அவரது ‘இரவுகள்’ கவிதையின் வரிகள்

    *
    Continue Reading


    பத்து வருடங்களுக்கு முன்பான எனது உள்ளிருப்பை பிரதிகளாக்கும் இந்தக் கதைகள், புதுஎழுத்து - ஜூலை 2006 இதழில் வெளியானது. மூன்று கதைகளும் ஒரே காலவயப்பட்ட பிறிதொன்றின் தொடர்ச்சியாக தம்மை தகவமைத்துக் கொண்டவை.

    1
    ஆகாயவெளியில் உடலற்று நிற்பதை உணர்ந்தான். மிதத்தலின் லயம் சிறகை விரித்திருந்தது. இருத்தலுக்கும் இன்மைக்கும் உள்ள பிளவில் அவன் வெகுபருவம் காமமுற்ற கொலையுடலின் விறைத்த குறியென நீடித்த நினைவைச் சுமந்திருந்தான். இடையிடையில் தானாய் சிரிக்கும் பழக்கமும் தொற்றிக் கொண்டது. பேருந்தில் ஜன்னலோரம் சாய்ந்து பாடும்போது தன்னை கவனிப்பவனின் வாயும் ஏதோவொரு ஒலியைப் பாடல்போல முனகுவதைக் கண்டு மருட்சியடைய நேரிட்டது பலமுறை. அவன் உலவும் பாதைகளில் மேகங்கள்கூட முதியவனின் சுருங்கின வாயின் வெற்றிலைக் கறைகளென நிறம் பீறிட்டு அவனை சூழ்ந்து சதா வலை துழாவிக் கொண்டிருந்தன. வாழ்வின் நுண்திசைகளில் கண்டிருக்கும் அனுபவங்கள் புதரில் மறைந்து இரைவெறிக்கும் மிருகத்தை சூழல்படுத்திற்று. ஊடுறுவி வெளியேறின எதனுடைய ஆரம்பத்தையும் அவனால் நினைவுகூர முடியவில்லை. அனைத்தையும் அம்மாவின் முலைத்தொடர்பு மயக்கமடைந்த கனவாக பாறையடைத்திருந்தது. ஒரு பொழுதில் தாமரைவடிவ தியானம் இருப்பின் ஓய்வுக் கலவியாகத் துவங்கிற்று. அந்நிலையின் தன்மயக்கம் மழைக்கால வனப் பயணம்போல. நிர்வாணமுற்று படுக்கையமர்ந்திருந்த பொழுதுகளில் பயத்தில் அடைத்திருந்த அறைக் கதவினை நோக்கி யாராவது கல்வீசக் கூடும் என்ற நினைவின் முதலடிபட்ட ரத்தக் கசிவு நகுலனுடைய எழுத்தின் சுயம்நசித்தலில் காயம்பட்ட பூனைகளின் கண்ணீர்வடிவை ஒத்திருந்தது. கண்ணாடியில் உடல் மெலிந்த நவீனனை அடிக்கடி சந்தித்தான். புத்தனை பிரதிபலித்தது அவனது நெஞ்சின் எலும்புவரிகள். இதுநாள் வரையிலான நகுலனை புணர்ந்தெழுந்த அவனது கவிதைகள் பிரசுரிக்கப் படாமலே அவனது துருப்பெட்டியுள் விந்து துடைத்த கைக்குட்டை மற்றும் மஞ்சள் பத்திரிகையென பாவிக்கப்படுவனவற்றோடு பதுங்கின. குடிப்பொழுதுகளை வேர்தொலைந்து உடன்தொற்றின நண்பனின் மனக்கலக்கப் பேச்சுக்கள் ஆக்கிரமித்துக் கொண்டன. எனது மீத நகர்வை தனது சுய இச்சைக்கு வழிப்படுத்தத் தீர்மானிக்கத் திட்டமிட்டு எனது உழைப்பின்சுவடைப் பின்தொடர்ந்தது அவனது துர்நாற்றமடிக்கும் நிழல். அந்த நண்பனது முகத்தினுள்ளே பிதுங்கின தசைநெளிவுகளில் தூக்கம் சிரமறுத்த இரவுகளின் காற்று பொசுங்கும் சப்தத்தை புகைத்தூதும் மூச்சுத்திணறலோடு இவனது காசநோயுற்ற தந்தை நொடிகளின் எலும்புகள் நொறுங்கிவிழ இறுமிக் கொண்டிருந்தார். இல்லாது போன அவரை நினைக்கும் போதில் இன்று போலிருக்கும் நேற்று. இதைக் காண சகியாமல் உயிரோடு இருப்பதான பாவனை தனது அழிதல்பொழுதை ஆல்பெர்ட் காம்யூ உடல் கலைந்த விபத்தில் எதிர்விழைந்திருந்தது. புணர்ச்சி குறித்த கிளர்வுகளும் பெருகின. சுதா ரகுநாதனின் ஒலிநதியில் பிணமாய் தவழ்வதாக ஓர் கற்பனை மண்டின நள்ளிரவும் வழிந்து அகன்றது. குற்ற உணர்வு மனம்நைந்த தோற்றத்தோடு உறவை தற்காப்பு செய்தது. தூக்கவேளைகளில் உத்தர வெறித்தல் என்பது ஓர் அற்புதமான நிலவொளியின்போதான கவிதைவாசிப்பு. மெய்யடங்கிப் போயிருந்த இந்த தருணங்களைத் தவிர்த்த வேளை களில் நண்பர்களின் உறவுச்சுற்றம் அவனது மொழியின் சமாதானமற்ற கூர்மையை நையப்புடைத்தன. அனைவரது நாக்குகளும் அவனுள் நுழைந்து நரம்பின் உட்குகைகளை ஊடுறுவி நெகிழ்ந்தோடும் குருதியினை உறிஞ்சித் திரிந்தன. சமீபமாக, பேசும் உரையாடலின் இடையிடையே அகவயத்தில் அழுகை குழிவீழ்ந்த யானையென மருள்வதை நெடியுணர்ந்து அதிர்வடைந்தான். சிறுபிராயத்திலிருந்தே துணைதந்த வாயும் கோணத் துவங்கின நிலை. யாருமற்ற மாலைத் தனிமையின் மலைசரிவு. அந்நிலை கடலோசையில் எழும் காற்று. கழிவறையில் தன்மைதுனம் செய்யும் சிறுவனின் (-மீசைப் பருவத்தில் இவனது கண்ணாடியில் காமம்நெளியும் பூனைமுறைத்தது-) மனக் கலவரத்தில் சக மனிதர்கள் தன்னுடைய அண்மையுள் பாயமுயல்வதை எண்ணும் மனப்புழுக்கத்தை நாட்களின் இடப்பெயர்வு நிறைத்துச் சென்றது. செத்து விடுவோமோ என்ற பயமும் தொடர தியானப் பொழுதுகளில் விவேகாநந்தரின் கைகள் கட்டின ஒளிமௌனம் அடைகாத்தது. பாழடைந்த அடுப்பின் கரப்பான்களாய் திரியும் பயத்திற்கும், அவனது பிறப்புறுப்பிற்கும் ஒருமைவடிவம் இருப்பதை அவன் அகப்பட்டுக் கொண்ட நூலகங்களே பிரதானமாக பறைசாற்றின. அவன் விருப்பத்தை பழுதடையாமல் மனதில் தாங்கியிருக்கும் அவளுடனான (அவள் பெயரின்பின் வானம் கைவிரிக்கும் பரப்பில் ஓவியமிருந்தது) கற்பனை உராய்வுத் தோற்றங்களின் மன உலா கண்டு மெலிதான நடுக்கத்திற்கு வந்திருந்தான். அவளைக் காண்பதன் சந்திப்பைத் தவிர்க்கப் பார்த்தான். கிழிபட்டு கோளமாய்ச் சுருண்டிருக்கும் சுவர்க்காகிதங்கள் அவளது மார்பெழுச்சியை பிரதிபலித்தன. பெண்ணுடலை தொட்டுணரும் முதல்கணம் தசையின் இருப்பு புயல்மரங்களாய் சரியும் என அஞ்சி தஞ்ச மாற்றுக்கென திரைப்படங்களின் இடையே நிர்வாணம் நீலம் போல் வருமெனத் தேடி திரையரங்குகளுக்கு சென்று வந்தான். உரிக்கும் நேரத்தில் அணிந்து கலைந்தனர் நடிகர்கள். அங்கும் விளைந்தது ஏமாற்றம். இடைவேளையில் சற்றும் எதிர்பாராமல் இவனது இடுப்பை வாய்குழியடைந்த கிழவர்கள் தினவுடன் கண்கூர்ந்தார்கள். மூச்சை புதைத்துவிடும் சிகரெட்டுகளின் புகைபோக்கம் காற்றின் அபரிமித விந்தாய் சூழ்ந்திருந்தது. கழிவறைத் தரையில் செத்த பாம்புகளாய் நீண்டிருந்த சிறுநீர் கோடுகளில் எண்ணை பிசுபிசுப்பில் திரையில் தப்பிவிட்ட நீலம் அலைவதைக் கண்டு உடல் குறுகினான்.அகம் வெடிக்குமுன்னே அங்கிருந்தும் இங்கிருந்தும் தப்பிக்க ஆகாயம் இறுதிப் புகலிடமானது. எனினும் மிதத்தல் தரும் கொடும் அயர்வை அவனது உள்ளம் ஏற்கும் நிலையிலில்லை. தொடரும் காலத்தின் பூரான் நகர்வை தவிப்பின் கவலையோடு பார்த்துக் கொண்டிருந்தான்.இடைநேரங்களில் ஓஷோவின் தாடி பிடித்து இழுப்பதற்கான ஞானம் விரல்களில் கிளைபாவின நகங்களின் கூர்மையில் துடித்தது. மேலிருந்து பார்த்ததில் பூமியின் பச்சை ரோமங்களாகத் தென்பட்டன மரங்கள். நிலை தன்னுணர்ந்து உடல் நலிவுற வேண்டுமென பேச்சை அழித்தான். எண்ணத்தின் மௌனமும் விடைபெற்றுச் செல்ல இப்போது ஆகாயத்தில் செடிகளில் ஊறும் எறும்புகளின் வழித்தடத்தைப் பின்தொடரப் பழகியிருந்தான். வெகுண்டு இவனையும் உணவாக்க யத்தனமிட்டன எறும்புகள். உயிர்ப்பைக் காப்பாற்றும் வேதனையில் மரணம் பூப்படையாத பழைய ஞாபகங்கள் அவனை இன்னும் தொலைகாலம் மிதக்கும்படியே இருக்க சபித்திருந்தன.
    2
    கதை அல்லது கவிதை எனத் தோன்றியவையுள் உடல் ஒலியற்ற வேதனையை பதுக்கியுள்ளதை கூறும் வயதையடைந்திருக்கும் நனவிலி மனத்தை நேரில் காண திட்டமிட்டான் ஒர் இளம்பருவம். கைவிட்டுப்போன இல்லாதவை களைப் பற்றி நினைவின் நடைதருணங்களில் அசைபோடுவது அவனைத் துரத்தியவண்ணம் இருந்தது. தப்பியோட நோக்கம் பெற்றிருந்தான். மூலிகைகளென கற்பனை தந்த செடிகளின் சாம்பலை விநியோகித்து உடல்காத்தான். பதிலுக்கு கிடைத்த பணத்தை தொற்றிக் கொண்ட செடிகளின் கோபம் இதயம் வெறுத்து துப்பின எச்சில் அவனது அழுக்கடைந்த உடைகளில் விரவி வழிந்தது. எனினும் தைரியம் குன்றாமல் தற்காலிக உணவை செடிகளின் உயிரிலிருந்து உறிஞ்சுவதாகவே தொடர்ந்தது அவனது இதுவரையிலான வாழ்வியல்முயற்சி. தோல்வியுற்று சருகு எய்தின செடிகள் உதிர்ந்த சாலைகள் அவனது நடமாட்டத்தை மகத்தான குற்றமென பகிரங்கமாகத் தடயப்படுத்தின. வீதியோரம் பிம்பம் கசியும் கண்ணாடிகள் வழி தன்னைக் காணும்குணத்தில் இருப்பின் நீட்சியை உறுதிப்படுத்தி தன்னை இணைதொடர்ந்தான் அவன். நிற்கும்போது காணும் காட்சிகளுக்கும் நடக்கும்போது காணும் காட்சிகளுக்குமான உருவபேதம் முதுகில் குத்தப்பட்டுவிடும் அருகிலான கத்தியின் இரும்புவாசனையாய் பயமுறுத்தியது. இடம்பெயர இயலாவிதம் செய்திருந்தது வெயில்கால நாயின் மந்த கதி. பிறப்பெடுத்த வாலின் குறுகுறுப்பை எதிர்படும் நகைச்சுவையம்சங்களுக்கு சிரிக்கத் தலைபட்ட கணங்களில் அசையும்போதிருந்து கண்டுகொண்டான். அவனுக்கு எதிராய் வந்து பின்புறம் கடந்துகொண்டிருந்த பலரது உடல்கள் நகரும் கொலைவாட்களாய் உரசிச் சென்றன. அனைத்தும் சலித்து மட்கிப்போய் மந்தம்கண்டுவிட்ட நகரநகர்வில் அரிதாகப் பார்வையில் படும் ரயிலின் வேகம் அவனை பிரமிப்பைத் தந்தது. ரயிலின் தற்கொலைகளில் உயிரின் வலி நினைவில் பிடிபடாதது போல. அதற்கடுத்தாற்போல் பெண்களின் பின் அசைவுகளில் அவனது கண்கள் நிலைகுத்தி அலைந்தன. பெண்குறியை பெரும் சோழி என்று கூறி நகைத்த எனது முகம் கொண்ட பால்ய நண்பனை உயிருடன் நிர்வாணமாக பிரேத அறைகளுள் பூட்டிவிட்டு சாவியைத் தொலைத்துவிடும் மூர்க்கம் வெகுண்டது. அவனது பாலியல் நுகர்வை இவன் பெறமுடிந்ததில்லை. இதன் ஞாபக இடைச்செருகலில் ஏற்பட்டுவிடும் நள்ளிரவு விழிப்பு பெரும்கொடூரம். அருகில் பல பெண்ணுடல்கள் தீரா கற்பனையில் நெளியும். பல குறிகளிணைந்து நீண்டுவிட்ட காமப் பாம்பை மரணப்படுத்துவது என்பது சூழ்ந்தவற்றிலிருந்து விலக்கம் பெறக் காத்திருக்கும் அவனுக்கு மிகவும் வலிகளாலானது. அத்தருணம் உடல்களின் பாரம் சுமக்கவியலாமல் வீரிடும் மயானத்தின் நெடிய காக்கைக்கூக்குரல். நகுலனிலிருந்து ஓஷோவை அவன் மாற்ற சப்தம் அடைந்ததும் இவ்விதம்தானா என்று சமீபமாய் ஆச்சர்யத்தை அவ்வப்போது எண்ணிக் காணும்படி மனவியப்பு பெற்றிருந்தான். அடிக்கடி தலை சுற்றுவது போல் தோன்ற அகத்தில் சிரிப்பு ஒளியோடியது. ஓஷோவின் தாடிக்குள் மறைந்துகொள்ள துடித்தான். மீண்டும் மேகங்கள் அவனை உறிஞ்சிவிடுவது போல பாவனைப்படுத்தி மேல்தொடர்ந்தது. நீண்ட காலத்தை தன்வயப்படுத்தின சிலநொடிகளுக்கு முன் தலைநசுங்கி இறந்த பெண்ணை சாலையோரம் தென்படக் கண்டான். அவனது இதுவரையிலான பிராயத்தில் இவ்விபத்து எதிர்பாராத முதன்முறை. சற்றே அவள் கால்கள் புரண்டு கொலுசுகள் குலுங்கின. அவளது இருப்பிற்கு முன்னும் பின்னுமாக தன்னைத் தொடரும் காற்றின் ஊளையிடல் சஞ்சலப் படுத்தியது. அவளை இனித் திரும்பவும் காணவே காணஇயலாது என்ற யதார்த்தம் அவனது கதை கவிதைகளில் ஊடுறுவி ரத்தம் வழிய நின்றது அவன் மீதமிருந்த தற்காலம். எழுத்தைக் கொன்றால் இறைமை பெறலாம் என்ற வாசகம் (காகிதத்திலிருந்து கண்களுக்குள் விரவிச் செல்லும் எழுத்துப் புற்று) அவனை அவ்விடம் விட்டகன்றுவிட முறையீடு செய்தன. ஓர் அச்சம் சிதிலமடைந்த மறைவிடத்திற்கு அழைத்துச்சென்று இவ்வரிகளைத் தான்தான் கையளித்ததாக கூறின வெகு கணமே ஓஷோ தூசுபடர்ந்த சிற்பமாக மாறிவிட்டிருந்தார். தாடி மாத்திரம் தொலைவில்காணும் அருவியென அசைந்துகொண்டிருந்தது. தியானநேரம் விறைக்கும் குறியை பொழுதுபோகாமல் வாசலில் நின்றிருக்கும் அயலான்போல வேடிக்கை பார்ப்பதை தவிர்த்து சிதறிக் கிடந்த புத்தகங்களை வரிசைப்படுத்தி அலமாரிப்படுத்தும்படி நண்பர்களென சூழ்ந்திருந்த நண்பர்கள் வேண்டுகோளிட்டார்கள். உடையிலிருந்து உள்ளுடலுக்குத் தாவிவிட்ட செடியின் சாம்பல் வாசனை தகிக்கப் பெற்ற இவன் அவர்களின் திடீர்வருகையை புதிராகப் பார்த்தான். அவர்களது குரல்கள் வலியற்றதாக இருந்தது ஆச்சரியம் கொள்ளச் செய்தது. வார்த்தைகளும் அவர்களும் கொண்டிருந்த தொடர்பு பணம் கொடுத்து பாலுணர்ச்சி தணித்த உடலின் சுகத் தளர்வை ஒத்ததாயிருந்தது. வாழ்வை பரிட்சிக்காத அவர்களிடமிருந்து தனிமைப்பட்டு தன் மைதுனம் போல் எழுத்தென தோன்றினவைகளை எழுதிப்பெற்ற பரவசத்தை மீண்டும் இசைவழி இனம்கண்டான். அவன் சுழலும் சுற்றில் வேறு இணையென மாற்றுக் காணமுடியாத இளையராஜாவின் இசைப்பகிர்வில் பிறந்த மகிழ்வு இக்காலகட்டத்தின் பல சந்தர்ப்பங் களில் இவனது இதயத்தில் வானுயரும் செடிகள் நட்டன. உடலம் குறுகி உயிர்பெருகியது. அன்பின் சுடர் வினை. ஓஷோவின் கல் குளிர்ச்சி மீண்டும் இவனுள் சிலைவிடத் துவங்கியது. தாடி வளர்க்க முயன்றான். இவனது வசிப்பை ஜீரணப்படுத்திக் கொண்டது மனம் சூன்யப்பட்ட தற்காலிக உலகம்.

    3
    தொடர்வது எதற்கான பயணம் என்பது அறிதலுக்குப் பிற்பாடு தெளிவாகக் கூடும். வாழ்வு ஒரு நுட்பமான கற்பிதம்.இசைவும் மறுப்பும் ஒருசேர அதன் சிதைவை உற்பத்தி செய்துவிடுகின்றன. இதற்கெல்லாம் நடுநாயகமாக அமர்ந்துகொண்டிருக்கும் சிந்தனைதான் அனைத்தையும் பேணும் கூன்விழந்த குரூரம். வரலாற்றின் முதல் கொலையாளியான சிந்திப்பை சிரமறுக்க சிற்பங்களின் மௌனம் புதையுண்டிருக்கும் கோவில்கள் செல்வது உவப்பாயிருந்தது. அங்கிருந்த பக்தர்களின் இச்சை களனைத்தும் ஒன்று திரண்டு உருக்கொண்ட ஆவேசப் பறவையென வெளவால்கள் காலத்தின் கைகளுக்கெட்டாத சுதந்திரத்தின் சாப வாசனையுடன் சலசலத்தன. அவற்றின் அலையடிப்பை ஒற்றைத் துணையெனக் கொண்டிருக்கும் சுவர் சிற்பங்களின் அசைவற்ற கனிவு அவனது மனத்தை நிதானப்படுத்திற்று. அழிவடைந்த சிற்பங்களில் தென்படும் முலைத் தோற்றம் போன்று பெருகின வடிவங்கள் இவனைக் கவர்ந்தன. எண்ணெய் பிசுக்கேறிய எறும்புகள் அவ்வடிவ நேர்த்திகளை கால் சுகித்தபடி நடமாடித் திரிந்தன. இவனது உடலிலும் எறும்புகளின் குறுகுறுப்பு கற்பனையிட்டது அக்கணம். சுற்றி யிருந்தவர்கள் பாரம்பரிய சிதறல்வயப்பட்ட கண்களோடு இவனை உற்றுப்பார்த்தார்கள் அந்நியன் எனும்படி. தன்னலம் மட்டுமே பிரார்த்தனையாக தனக்கிணையாக வேறு ஒன்று இருக்கிறது என்பதே அவர்களுக்கு அருவெறுப்பைத் தருவதானது.அவர்களது ஒவ்வொரு சொல்லிலும் வெருண்டோடின எலிகளின் தற்காப்பு. அங்கிருக்கும் அவனுக்கு சமயங்களில் இவனாக தானிருப்பதே ஆதுரமான புகலிடமாக இருந்தது. உள் இருள் கூடி பார்வையின் புறமாகவும் விரவத் துவங்கினது போலிருந்தது தூண்களின் பாழடைந்த கரியபூச்சு. சுற்றில் தென்பட்ட யாழியின் வாய்பிளவில் இவனது மனம்நலிவுற்ற கொடும்நண்பனொருவன் முகம்நீண்டான். (ஒருமுறை யாழியின் விதவிதமான வடிவம் சிற்பிகளின் தன்குணச் சாயலை வெளிப்படுத்துவதாக அதே நண்பன் காரணப்படுத்தியிருந்தான்). அந்த நண்பன் உடன்வந்திருந்தது இப்பொழுதுதான் நினைவில் உறைத்தது. நண்பனான அவன் பலமுறை பல சொல்லியபடியே உடன்தொடர்ந்தான். இவன் பேசும்போது உடனே பதிலீடுசெய்துவிட ஏகும் பதற்றத்தை மௌனமாக அடைகாத்திருந்தான் பதுங்கின புலின் அடிப்படையில். யாழிகளின் விதவிதமான குறிவிழிப்புக்கள் இவனது உள்மோகம் தூண்டின. தூரம் கடந்த இகவயம். உடனடியாக இருப்பதான விஷயங்கள் இல்லாதனவாக சாயை அடைந்தன. நண்பன் சுவரொலியின் அசரீரியாக தொடர்ந்த வண்ணமிருந்தான். இவன் நின்று நின்று நடந்தான். அதில் ஒரு வலு உற்சாகம். பெற்றோரோடு வலமிட்ட சிறுவர்கள் கோவிலை விளையாட்டு மைதானமாக்கும் தவிப்பிலிருந்தனர். அவர்களது மழலைத் துடிப்பைக் காணும்போது அவர்களது முகத்தில் இவனுக்கு அவன் கடந்துவந்திருக்கும் பல கலைஞர்கள் நெரிசலாகத் தென்பட்டார்கள். வெகுநேரம் நடந்த அயர்வில் எண்ணத்தின் பிடிபடாத குறியீட்டுப் புதிர்களின்வழி நிலை விட்டகலத் தோன்றியது. சிறுவர்களின் அசூர வளர்ச்சி நிழலாய்த் துரத்த வானம் தெரிந்த கடல்வெளியில் சற்றுப் பொழுது அலைந்தான். வழிநாய்கள் முகம்சுருங்கி ஏதேச்சையான முறைத்தலை கையாண்டன. எங்கு சென்றிடினும் விடுபட எண்ணுவதிலிருந்து விடுபட முடியவில்லை. காற்று மூச்சுதிணறும்படி கடலலைகள் அலறியெழுந்தன. கடல்நீர் கால்களை அரித்து சூட்சமமாக உள்ளிழுத்தது. துயரத்தை தசைகளாய் பெருக்கி பெரும்சிறுவனென வளர்ந்துவிட்ட இவனது உடல் சிறுபடகாக அலைபடும் எனும் யோசனையில் சிற்பங்களின் எண்ணெய் ருசி சலித்த எறும்புகள் இவனது இருப்பிடம்நோக்கி இடம்பெயரத் தலைபட்டன. 

     *
    Continue Reading
    Newer
    Stories
    Older
    Stories

    மரம்

    • January 2014 (1)
    • December 2013 (4)
    • November 2008 (3)
    • October 2008 (2)
    • February 2008 (3)
    • September 2007 (5)

    இலை

    • அஞ்சலி
    • இத்தாலிய சினிமா
    • கதை
    • கவிதை
    • தமிழ்சினிமா

    கிளை

    recent posts

    Created with by BeautyTemplates and Infinyteam

    Back to top