Pages

facebook twitter

.

    • முகப்பு
    • அறிமுகம்
    • சினிமா
    • இலக்கியம்
    • பயணம்
    • செவ்வகம்


    புதுஎழுத்து - 14ஆம் இதழில் வெளியான எனது கவிதைகள்.


    1நினைவுப் பாதை

    *

    2எதைச் செய்தாலும் அறிந்தாலும் உணர்ந்தாலும்

    எல்லாவற்றிற்கும் இடைவிட்டு

    இடை தொடர்ந்து வருமொரு

    சூன்யம்தான் நம்மைக் காக்கிறது



    எனவே அர்த்த பூடகம் உடையாமல்

    பிம்பங்கள் சூழும் உதாரணம் கலை

    இல்லையெனில்

    மீண்டும் சாலைகடந்த பூனையின் நசுங்கின அலறல்

    உனது எழுத்தின் செவியில் கேட்கும் என்றாய்

    உன்னுள் பாவிக்கிடந்த இம்முறை



    உனது பார்வையில் உள்பொங்கின மறை சிரிப்பை

    கேட்டபோது குறுக்கிட்டது

    பூனையின் மருட்சியில் பிறந்தலையும் சூன்யமுகம்



    அடர்மழையென வீறுகிறது

    உனது சொல் துவக்கின நினைவின் மின்னல் வலி



    நாம் அமர்ந்த அறையில்

    முற்பிம்பங்களின் நெரிசலை பத்திரப்படுத்தி

    கடிகாரம் நிற்கிறது



    மரங்கள் உடல்சாயும் ஓசையின் நிலச்சரிவு



    அயர்வடைந்த மின்விசிறியின் மனஉளைச்சல் இன்னும்

    உன் கண்ணில் அடர்கிறது

    சொல்லை புணர்ச்சி செய்து நீ வாழத் துடித்த உயிர்த் தினவு



    காமம் இழந்தவனின் கவிதை மேலிருக்கும்

    கத்தியின் கூர்மை என



    உனது வாக்கியங்களின் உள்சயனம்

    3சொல்லில் சிக்காது சிந்தனையில் வாராது

    இருப்பற்றுப் போனதை உணர்ந்த அச்சத்தின் ஊன ஒலி



    சடலம் நிரம்பும் உடலின் மனப்பிதற்றல்

    வானம் எட்டுவதாயிற்று



    வழிநெடுக நிழல்தீண்டும் தனிமையின் கொலை துரத்தல்

    அக்கண உண்மை

    கிளை சாய்ந்த மரம் முகரும் பறவையின் கடும்துயர்



    வெகுண்ட சீற்றத்தில்

    பற்றுகிறது பாம்பின் நாக்கு தீயின் கொடும் திளைப்பில்

    பசியெறும்பு தின்ற சரீரம்

    வசிப்பின் மெய்மையை கடந்து

    மறைந்துபோனது தொலைதூரம்



    அடிபட்டும் சாகாத பறவையாய் உணர்வின் சித்தநீட்சி

    மாத்திரம்



    கலை தின்றுதீர்த்த வாழ்வு இருள்வெளியில் பெரும்பான்மை

    கழிந்ததும் பின் அழிந்ததும்

    உனக்கும்

    உன்னைத் தொட்ட எனக்கும் நிகழ்ந்த மாயம்



    பெரும்நரை பூத்து தோற்றகணம்தான்

    ஞானக் குகையின் வழிதிறந்து பேரதிர்வில்

    சிரித்தான் உன்னுள்

    நீ புக நினைத்த சித்தன் எனும் புத்தன்



    நானுமறிவேன் விலங்குகள் நிறைந்த

    அந்த மலைப்பாதையை



    பாலில் வழியும் முலையென கண்விழிக்கிறது

    அவனும் நீயும் இருந்தது குறித்த நம்பகம்



    கால்தவறி தரைவிழுந்து

    இகம் கரம்கோர்க்கும் உறவின் விருந்தில்

    சூடேற்றப்படும் நேசத்தின் சதை

    பழைய உணவாக பரிமாறப்படுகிறது



    வரவை உணர்த்தும்

    மழைதருணத்தின் கதவுகளாக அறைபடுகிறது

    அங்கு

    தொடர்ந்திருப்பது குறித்து நாம் கொண்ட கற்பிதம்



    உனது பிரதி வாசிக்கப்படுகிற தருணத்தில்

    மண் புதைந்த பாழ் சிற்பத்தின் கற்துளையில்

    எறும்புகள் தியானிக்க துவங்குகின்றன

    நெடும்நேரம்



    நசிவின் போதம் திரள நினைத்துப் பார்க்கையில்

    குற்றம் கனக்க நிகழ்ந்திருக்கிறது

    ஆதிமீனை உட்கொண்ட காமமுயற்சி



    பல்லியின் திட்டமிடலுக்கு பிணமாகும் பூச்சியின் பிரதிபலிப்பு

    உன்னை எழுத்தில் நீ இழந்ததுபோலவே

    சாயை தருகிறது இப்பொழுது



    சுற்றத்துடன் கொண்டிருந்த அன்பை துறவு செய்து

    பற்றின கிளை அறுபடும் தருணத்தில் புத்தன் (ஆக) நீ  யோசிக்கிறாய்



    மீனின் விறைத்த பார்வை



    இத்தனை அனுபவங்களும் தறிகெட்டலையும்

    அப்பாலின் மூலம்

    யாரும் விளங்கிக்கொள்ள முடியாத

    வாழ்வுப் புனைவை அணிந்து

    நீ உன்னைக் கண்ணாடியில் பார்த்துக் கூறிக்கொண்டது:

    4உனக்கு நீ இருப்பதால் நான் உண்டு: எனக்கு நீ இல்லை

    என்றால் நான் இல்லை



    உனது நடைதொடர்ந்து

    நீரின் சூலுற்ற பெருக்கத்தில் உறையக் காத்திருக்கிறது

    அசைவின் அனைத்தும்



    தனிமைப்பட்ட கதியில் உனது சூரல் நாற்காலியை

    சுற்றி வருகிறது

    நீ நேசித்து உயிர் தப்பின பூனை

    உடலசைத்து எஞ்சியிருந்த அலைவுக் காலம்

    *
    (தன்னையுணரத் தலைப்பட்ட நகுலன் நினைவில்)



    1. நகுலனது நாவலொன்றின் தலைப்பு



    2, 3, 4. அவரது ‘அஞ்சலி’ எனும் நீண்ட கவிதையின் வரிகள்

    *



    1நிழலற்றவனின் அலறல்

    *
    நூற்றாண்டைத் தொட்டுவிடும் ஒரு மரத்தின் வேரடியில்

    அமர்ந்து வாசிக்கிறேன் உனது கவிதைகளை



    இடைவெளியற்று பிணைந்திருந்த வெயிலின்

    மன சூன்யத்தை மேலும்

    வெம்மைப்படுத்திக் கொண்டிருந்தன

    கடக்கும் வாகனங்களின் சமன்குலைந்த பேரோசை



    காற்று நீங்கின வெற்றிடத்தின் மூச்சுத் திணறல்

    அசையாதிருந்தது சூழ்மை



    வியர்த்தது மேலும்



    வாசிப்பின் நதியோட்டத்தில்

    எண்ணெயில் பொறித்த மனித உடலமாக மிதந்து சென்றது

    உனது எழுத்தின் துயரம்



    நோய்கண்டவனின் நடையென புரளும் பக்கங்கள்

    மரத்தின் மறைந்த நினைவுகளாய் அடர்ந்திருந்த காகிதத்தில்

    தேள்கடி பட்ட தடங்களென கரும்வரிகள்



    எட்டிப்பார்த்து கால்நழுவி தேடிச் சென்றதில்

    விழியில் பட்டது வறுமையும் கூக்குரலும்



    வழிநிலைத்த அரவமானேன் நெடும்பொழுது



    நொடிப் பிளவின் அதிர்வில்

    எழுத்துக்களின் சிறையுடைத்து வெளிவீழ்கிறேன்



    வரிகள் புதையுண்ட மயானத்தில்

    மதுக்குப்பியின் இறுதிச் சொட்டை அருந்திவிட்டு

    காத்திருக்கிறாய் நீ

    அனுபவங்களின் சீழ் கசிவை எழுத முயலும் பதற்றத்துடன்

    எனது வரவை எதிர் கணித்து



    நமது சந்திப்பில் பாயக் காத்திருந்தது

    தறிகெட்ட போதையிலான விபத்தின் இரத்த நெடி



    பொழுதின் மனப்பிறழ்வில் தனிமையின் சிரமறுக்க

    உனது மடியில் முளைத்துவிட்ட மரமொன்றைத் தாலாட்டி

    பாடலொன்றை துவங்குகிறாய்

    காற்றின் காதுகள் கிழிபடும்படி



    2சிரஞ்சீவியின் சாபத்தால்

    வயோதிகம் கண்ட மழலையின் ஓலத்தைச் சுமந்தலைகிறது

    அப்பாடல்



    உச்ச இசை கதியில்

    பசித்த கனவின் வேதனையில் நொடிகள் கரைய

    மட்கிப் போனது உனது மடியிலிருந்த மரம்



    தனிமைப்பட்டு மீண்டும் அகம் வெறிக்கிறாய்



    துளி தவறாமல்

    படைப்பவனின் கண்ணீரைச் சேகரித்து

    நிரம்பிவழிகிறது உனது உற்றதுணையான மதுக்குப்பி



    எனது வருகைக்குப்பின் நாம்

    கிளையடித்து மூட்டிக்கொண்ட தீயில்

    வேதனையற்ற சிரிப்பொன்றை நீ உதிர்த்தாக

    என்னுள் கூறிக் கொள்கிறாய்

    3நானிந்த மண்ணில் இருப்பதும் இல்லாததும் ஒன்றுதான்



    வறுமையின் பிரளயம் தகிக்கும்

    நிலைப்பை தாங்கவொண்ணாது

    நீ உடைத்த மதுக்குப்பியிலிருந்து தெறித்த துளிகள்

    ரத்தம் பூசின வண்ணத்துப் பூச்சிகளாகப் பறக்கின்றன

    வெளியெங்கும்

    நிலா கொப்பளித்த சற்றுநேரம்



    நினைவின்போதம் கண்மறைக்க

    உண்மையின் அம்மணத்தை மறைந்துபார்த்த பதற்றத்தோடு

    அமர்ந்திருக்கிறோம் அவரவர் வெளியில்



    நமது மௌனத்தில் உறைந்திருந்தது

    உடலை உண்ணுமுன் உயிரை மயங்கச்செய்யும் பாம்பின்

    வலு அணைப்பு



    எதிர்பாராமல் பாத்திரம் உருண்டோடும் சிரிப்பை தவறவிட்டு

    4ரணம் நிறைய கவிதையும்

    கவிதை நிறைய கால்தடங்களுமாக விடைபெறுகிறாய் நீ



    உனது வாழ்வை

    புகைப்படமென ஞாபகம் காக்கிறது

    நீ பதிந்த இடத்தில்

    5காற்றின் கூர்மையான கத்தி விழுந்து

    வேரோடு சாய்ந்த மரம்’



    மேலும்

    நீ கணங்களுடன் கொண்டிருந்த தொடர்பை

    நினைவாய் ஓவியப்படுத்துகிறது

    காகங்கள் இரையென எண்ணி முகர்ந்துசென்ற

    உடைந்த குப்பியின் உதிர்ந்த சில்லொன்று

    *
    (மலையாளக் கவிஞர் ஏ. அய்யப்பன் நினைவில்)



    1. ‘புது எழுத்து’ வெளியீடான ‘அய்யப்பன் கவிதைகள்’ தொகுப்பில் ‘பாவம் மகாகனியின் இதயம்’ கவிதையிலிருந்து எடுத்தாளப்பட்டு கவிஞர் சுகுமாரன் இட்டிருக்கும் முன்னுரையின் தலைப்பு



    2. அவரது ‘புறத்தோல்’ கவிதையின் வரிகள்



    3. அய்யப்பனது ‘ருத்ரா என்ற காதலிக்கு’ கவிதையின் வரியிலிருந்து உருவானது



    4. அவரது ‘ஞானஸ்நானம்’ கவிதையின் வரிகள்



    5. அவரது ‘இரவுகள்’ கவிதையின் வரிகள்

    *
    Continue Reading
    Older
    Stories

    மரம்

    • January 2014 (1)
    • December 2013 (4)
    • November 2008 (3)
    • October 2008 (2)
    • February 2008 (3)
    • September 2007 (5)

    இலை

    • அஞ்சலி
    • இத்தாலிய சினிமா
    • கதை
    • கவிதை
    • தமிழ்சினிமா

    கிளை

    recent posts

    Created with by BeautyTemplates and Infinyteam

    Back to top